புதுக்கோட்டை மாவட்டம், பொம்மாடிமலையில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்தும் கிராமத்தினர், காளை உரிமையாளர்கள், மாடி வீடு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன் பேசியதாவது, ஜல்லிக்கட்டு நடத்தும் விழா குழுவினர்களிடம் மாவட்ட நிர்வாகம் பிரமாண பத்திரம் கட்டாயத்தின் பெயரில் எழுதி வாங்குகின்றனர். அதில், ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரர்களுக்கோ, காளை உரிமையாளர்களுக்கோ விபத்து மற்றும் உயிரிழப்பு நேரிடும் பட்சத்தில் நபர் ஒருவருக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் விழா நடத்தும் கமிட்டியினரே செலுத்த வேண்டும் என்று எழுதி வாங்கப்படுகின்றன.
இதன் காரணமாக பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இந்த முறையை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறினார்.மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் அரசு சார்பில் நடைபெறுகிறது. அதில் ஆன்லைன் முறைகள் இருப்பதில் தவறில்லை.
ஆனால் உள்ளூரில் நடைபெறுகிற ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த ஆன்லைன் முறையை தமிழக அரசு நீக்கித்தரும் என்கிற நம்பிக்கை உள்ளது. கோயில்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் பரிசு வழங்காமல் மாடுகள் அவிழ்க்கப்படும். இதுதான் பாரம்பரியம் கலாச்சாரம். இதேபோன்று தான் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளையும் நடத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் ஒரு சிலர் தங்களது பெயர், புகழை பரப்ப வேண்டும் என்பதற்காக பரிசு என்ற போர்வையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை சேதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரன் கூறினார்.